குடும்பத்தில் முதலாவதாகப் பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளதால், இத்திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவிகளது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையென்றால், அம்மாணவர்கள் தொழில்கல்வி பயிலுவதை ஊக்குவித்திட, சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
முதல் பட்டதாரிச் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பித்ததும் ஐந்து நாள்களுக்குள் உரிய விசாரணை நடத்தி, சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர்கள் இதை வழங்குவர்.
இச்சான்று பெறுவதற்கான விண்ணப்ப மாதிரிப் படிவம், அந்தந்த வட்ட அலுவலகங்களில் தகவல் பலகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தினமணி- 1-5-2010